Saturday, November 3, 2012


அன்றைய மழைநாள் ......
இன்றைய நினைவலையில்
****************************************.


இரவு முழுவதும்
சோவென பெய்த மழை 
இன்னும் விட்டபாடில்லை..

முன் வீட்டுக் கூரை 
எங்கள் வீட்டு முற்றத்தில்

அப்பா ஆசையாக வளர்த்த
மரங்கள் அடித்த காற்றுக்கு
தாக்கு பிடிக்காமல்
அடியோடு சாய

அதை இழுத்துக் கட்டும் முயற்சியில்
கொட்டும் மழையையும் 
பொருட் படுத்தா 
போராடும் அப்பா...


ஒழுகும் இடங்களுக்கு 
பார்த்துப் பார்த்து 
பாத்திரம் வைத்து 
அலுத்துப் போன அம்மா


படலையில் யாரோ தட்ட
கூரையில் செருகி இருந்த
குடையை மெல்ல திறக்க
குடித்தனம் நடத்தி  இருந்த 
கரப்பான் பூச்சிகள் ...
பாவம்.


மெல்லத் தட்டி
உடைந்த கமபியை
அவசரமாய் சரி செய்ய
முயர்ச்சிக்கும் 
அண்ணா


அடுப்பங்கரையில்
ஊறிக் கிடந்த விறகை
தன்னால் இயன்ற மட்டும்
ஊதித் தள்ளி
மரவெள்ளிக் கிழங் கவித்து
தேங்காய் சம்பலுடன்
ஆவி பறக்க அவித் தெடுத்து
குழந்தைகளின் பசி யாற்றிய
அம்மாவின் பொறுமை.

புத்தக ராக்கையில்...
அடுக்கி வைக்கப்பட்ட
அப்பா எழுதிய 
கதைத் தாள்கள் எல்லாம்
தம்பிக்கு கப்பல் 
செய்து விளையாடும்
மூலப் பொருளாகியது.


வெளியில் நனைவதும் 
கூரைத் தண்ணீரில் 
கூக்குர லிட்டு குளிப்பதும்
அம்மாவிடம் அடி படுவதும்
இந்த சுகம் 
இன்ப சுகம் 
இன்னும் இனிக்கிறது.


முற்றத்தில் நின்ற 
முருங்கை மரம்
பூவும் காயுமாக 
முறிந்து விழுகிறது.


முற்றியும் பழுத்தும்
பளபளப்பாக  காட்சி தந்த
பப்பாசி மரம் 
அடிக்கும் காற்றுக்கு 
முகம் கொடுக்க முடியாமல்
முறிந்து விழுந்ததில்
முகம் சுளித்த அம்மா
இயற்கையை ஒரு நிமிடம்
நொந்து கொண்டாள்.


செருகிய முந்தானை யெடுத்து
முகத்தை துடைத்த படி 
விட்ட பெருமூச்சு
இன்னும் காதில் கேட்கிறது.


ஒழுகும் இடங்களில்
வைத்த பாத்திரங்கள் 
பத்திரமாக 
சத்த நாத மிசைத்து
ஒவ்வொரு வித சந்தமாக
இயற்கையின் இன்பத்தில்
நனைந்தது.

கிழிந்த ஓலைப்பாயில்
சுருண்டு படுக்கும் பாட்டியை
தாத்தாவின் வேட்டி
போர்த்திக் கொள்கிறது


தாத்தாவின் பிரிவின்பின்
பாட்டியின் ஆதரவு எல்லாம்
தாத்தாவின் வேட்டிதான்
அரவணைப்பாக..
தன்னை மறந்து தூங்கும்
பாட்டி..

இன்னும் எத்தனையோ
மழைக்கால நினைவுகள் 


இன்று

வசதியாக சாய்வு நாற்காலியில்
கால்களை மடித்து 
போர்வைக்குள்
 சுருட்டிக் கொள்கிறேன்.
நெஞ்சின் மேல் 
முகம் புதைத்து கிடக்கும்
பேரனைச் சுமந்தபடி
சோ  வென பெய்யும் மழையை
 ரசித்துக் கொண்டிருக்கிறேன்..

அறுபத்தி நான்காம் ஆண்டு
அடித்த புயல் போல் வருமோ
ஆதங்கப் படும் அம்மாவை
அனுதபமாக பார்க்கிறேன்.




இந்த  கவிதையை  1,11,2012, இன்று
லண்டன் வானொலி  வியாழன்
கவிதை நேரத்தில் வாசித்தேன்.
திருமதி சுஹைதா ஏ கரீம்
வெள்ளவத்தை..

..

No comments:

Post a Comment